Sunday, May 25, 2014

மறைந்து போன மச்சாள்!

மரணப்படுக்கையில் படுத்திருக்கும் கிழவருக்கு உறவுகள் பாலூற்ற உயிர் அடங்குவதாக ஊரில் சொல்லிக்கொள்வர். ஒவ்வொரு சொட்டுப் பால் ஊற்றும்போதும் நான் மகன் ஊற்றுகிறேன் மகள்   ஊற்றுகிறேன் எனும்போதெல்லாம் உம் கொட்டிய கிழவர் நான் மச்சாள் ஊற்றுகிறேன் என்றவுடன் எழும்பி இருந்ததாக கேலியாகப் பேசிக்கொள்வர்.

இந்தியத் திரைப்படங்களில் காட்டுவதுபோல மாமனைக் கல்யாணம் செய்வது அல்லது மச்சாளைக் கட்டுவது போன்ற பிற்போக்குத்தனங்கள் யாழ்ப்பாணத்தாரிடையே குறைவெண்டாலும் தங்கச்சிமுறையான பெண்கள் பழுகுவதுபோல மச்சாள் முறையானதுகள் பழகுறதில்லை! அவையளுக்கு வெக்கம்.

என்ரை அப்பாவழியாலை ஒருமச்சாள் இருந்தாள். அவவின்ரை மூத்த மகளுக்கு என்னைவிட இரண்டு வயது கூட! அப்ப பாருங்கோவன்!

அங்கை மச்சாள் இருக்கு இங்கை மச்சாள் இருக்கு எண்டாலும் நந்தியற்றை கதையிலை வாறமாதிரி ஒரு இராசாத்தி மச்சாளும் என்ரை வீட்டுக் கிட்ட இருக்கேல்ல.

எங்களுக்கு நல்லாத் தூரத்திலை இருந்த மச்சாள்தான் சியாமினி. மச்சாளைப் பற்றிச் சொல்லமுன்னம் என்ரை மாமாவை பற்றிச் சொல்லத்தான் வேணும். எங்கடை அம்மாவின்ரை இரண்டாவது தம்பிதான் என்ரை சின்ன மாமா. நாங்கள் வளர்ந்து வரமுன்னமே அவர் வெளிநாடு போட்டார் எண்டாலும் அவரை எனக்கு நல்லா நினைவிருக்கு! கீரிமலைக்கு காரிலை ஏற்றிக் கொண்டுபோய் நான் குழற குழற கேணியிலை முக்கி எடுக்கற அவரை எப்பிடி மறக்கிறது. கொழும்பிலை அப்பாவும் கிழக்கு மாகாணம் கல்முனையிலை அம்மாவும் வேலைபார்க்கிற என்னைப்போன்ற குழந்தையளுக்கெண்டே கடவுள் அனுப்பின அட்சய பாத்திரம்தான் சின்ன மாமா.

நான்நினைக்கிறன் எனக்கு நாலு வயதிருக்கேக்கை மாமா ஜேர்மனி போட்டார். எல்லாரையும் மாதிரி போய் இறங்கி கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் வீட்டுக்கு திரும்பி வர ஏலாத நிலையிலைதான் அவர் இருந்தார்.

1987...
மாமாவேடை திரிஞ்ச சத்திமாமா குமார் மாமா எல்லாரும் காணாமல் போயிட்டினம். அவையளை இந்தியன் ஆமிதான் சுட்டது எண்டவை! ஆனா பொடி கிடைச்சதாய் தெரியேல்லை. மாமா பெரிசா காசைக் கீசை அனுப்பாட்டிலும் அங்கை உயிர் தப்பி இருந்ததே பெரிய விசயம் எண்டு அம்மம்மா சொல்லுறவ.

இந்த பிரச்சனை மூட்டந்தான் சின்னமாமாவுக்கு கலியாணம் நடந்தது. இப்ப மாதிரி இன்ரநெற்றோ ஸ்கைப்போ இல்லாத காலம் அது. மாமாவின்ரை கலியாணவீட்டுப்படம் கிட்டத்தட்ட மூன்று மாதத்துக்கு பிறகுதான் இடம்பெயர்திருந்த எங்கடை கைக்கு வந்நது. படத்தை பார்த்துதான் அம்மம்மாவுக்கு தன்ரை மகனுக்கு கலியாணம் நடந்ததே தெரிந்தது. பேந்தென்ன! வழமையான யாழ்ப்பாணத்துச் சண்டைதான்.

சண்டையை தீர்க்கப் பிறந்தவள்தான் சியாமினி! அவள் பிறந்து அனுப்பிய படத்துடன் அம்மம்மாவின் உலகமகாயுத்தம் ஓய்வுக்கு வந்தது.

இன்பமும் துன்பமும் சுழல் சக்கரம் எண்டது தெரிய பெரிய புராண ஆகமங்கள் படிக்கத்தேவையில்லை. மாமாவின்ர கதையை கேட்டாலே காணும்! மச்சாளுக்கு இரண்டு வயதாகமுன்னம் சின்னமாமா விபத்தில் இறந்துபோனார்.

மச்சாளை மாமி வளந்தெடுக்க தொடங்கினா.

மச்சாள் பெரியபிள்ளையாகி மாமி படம் அனுப்பியிருந்தா. சும்மா சொல்லக்கூடாது. மச்சாள் கிளி மாதிரித்தான். அந்தப் படத்தை பார்த்திட்டு என்னோடை கம்பசிலை படிச்ச ஒருத்தன் என்க்குப்பின்னாலை திரிஞ்சவனெண்டா பார்த்துக் கொள்ளுங்கோவன்.

மச்சாள் நல்ல அமைதியான பிள்ளை எண்டு வெளிநாட்டாலை வாற ஆட்கள் சொல்ல அம்மம்மா குளிர்ந்துபோவா!


2006ஆம் ஆண்டு மச்சாள் இலங்கை வந்தா! ஏ9 பாதையை திறந்துவைத்திருந்த அனைவரினது புண்ணியத்திலும் யாழ்ப்பாணத்திலிருந்து அம்மா கொழும்பு வந்தா! மச்சாள் வரமுன்னம் அவவை பார்க்கோணும் எண்டிருந்த அம்மம்மாவும் இயற்கை எய்தீட்டா. ஆக மாமாவின் மகளை பார்க்க அம்மாதான் வரமுடிஞ்சது.


சும்மா சொல்லக்கூடாது. அழகு மட்டுமில்லை அமைதியான மச்சாள்தான் சியாமினி. வேலையில்லாப் பட்டதாரியாக இருந்த நான் எல்லாரையும் லைன் பஸ்ஸிலை ஏற்றி அப்பத்தான் மக்களுக்கு திறந்து விட்டிருந்த கோல்பேசுக்கு கூட்டிக்கொண்டு போகேக்கையும் முகஞ்சுழிக்காம வந்தவதான் சியாமினி!

எண்சோதிடம் எல்லாம் பொய் எண்டு ஏன் நான் சொல்லுறனான் எண்டா நானும் மச்சாளும் ஒரே டேட் ஒவ் பேர்த். மச்சாள் அமைதியும் அழுகும்! என்னை நீங்கள் கண்டிருக்கிறியள்தானே! இப்ப நீங்களும் சொல்லுவியள் ஒரே நம்ப் ஆக்கள் ஒரே மாதிரி இருக்காயினம் எண்டு!

அண்டைக்கு அதிகாலை 4 மணிக்கு கோல் வந்தது. மச்சாள் கான்சரிலை செத்துப்போனாவாம் எண்டு. நான் நம்பேல்லை! வேலைகூடினதாலை எனக்கு வந்த கெட்ட கனவெண்டுதான் நினைச்சன்.

என்ரை மனிசியும் அப்ப கோல் பண்ணிச்சுது. விசயம் உண்மைதான்.

மச்சாளுக்கு என்னைவிட பத்து வயது குறைவு!

மருத்துவம் படிச்ச என்னட்டையே அவள் மறைச்சுப் போட்டாள்! மறைஞ்சு போயிட்டாள்!

Wednesday, June 1, 2011

எங்கையெண்டு பார்த்துக்கொண்டிருக்கிறாங்கள்!

“இஞ்சை வா உன்னோடை ஓரு கதை” எண்டு கூப்பிடேக்கை எனக்கு விளங்கேல்லை. கூப்பிட்டவர் சோதியர். சிவயோகலிங்கத்தாரின்ரை கெமிஸ்ரி வகுப்பு நடந்துகொண்டு இருந்தது. சோதியர் இப்பிடி சும்மா வகுப்பை குழப்பி கூப்பிட மாட்டார். நாங்கள் அப்பத்தான் ஏ எல் படிக்கத் தொடங்கியிருந்தம். யோகலிங்கத்தாரின்ரை வகுப்பு கவனமாய்க் கேட்டுக்கொண்டிருக்க வேணும். தப்பித் தவறி நித்திரை கொண்டிட்டால்பேந்து அந்தாள் கேள்வி கேக்கேக்கை நிண்டுமுழுசோணும். முழுசிறது மட்டும் இல்லை. அவன் அப்பிடிப் படிச்சவன் இவன் இப்பிடிப் படிச்சவன் எண்டு உதாரணம் காட்டி பேசத் தொடங்கினால் எங்களுக்கும் பயம் பிடிக்காமல் வேறை என்ன செய்யும்?

விசயம் என்னெண்டு எண்டு தெரியேல்லை. நான் உவங்களிட்டை இந்தப் பெட்டையின்ரை பெயர் என்னவெண்டு கேட்டது தெரிஞ்சுதோ அல்லது மொக்குத்தனமா அந்தப்பிள்ளைக்கு யாரேனும் இருக்கினமோ எண்டு கேட்டது தெரிஞ்சுதோ தெரியாது. அவரும் அதைச் சொல்லேல்லை.

அந்த பழைய ஆண்டு 11 வகுப்பறைகள் வெறிச்சோடிப் போயிருந்தன. இங்கையிருந்து நாங்கள் அங்காலை போனாப்பிறகு ஒரு புது வகுப்பும் இங்கை தொடங்கேல்லை. வெக்கை குறைக்கவெண்டு வேய்ந்திருந்த உள் கிடுகுகளையும் தாண்டி எனக்கு வேர்த்துக் கொட்டியது.


அவரும் பிடி கொடுத்துப் பேசவில்லை. நானும் பிடி கொடுத்துப் பேசவில்லை.

உதுகளிலை மினக்கெடாதை! படி! எங்கையெண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாங்கள் உன்னை! உதுகள் பிறகும் வரும். உந்த இரண்டு வருசத்திலை விளையாடினியோ துலைஞ்சாய்!

அந்தாளை எதிர்த்தும் பேச முடியேல்லை! அவரே சுழட்டித்தான் கட்டினவர் எண்டு கதைக்கிறவங்கள். அவரே இப்பிடிச் சொல்லேக்கை!

எரிச்சலாய் இருந்தது. யாரோ தரித்திரம் பிடிப்பான் போய் அண்டியிருக்கிறான். உவங்களுக்கு எரிச்சல். நானே நடுங்கிப்போய் இருக்கிறன் என்னெண்டு அங்கை கேக்கிறதெண்டு! அதுக்குள்ளை இப்பிடிஎண்டா....

அண்டைக்கு பத்து நிமிசத்திலை திரும்பி வகுப்புக்கு போய்விட்டன். பாடம் ஒண்டும் விளங்கேல்லை!


அதுக்குப் பிறகு எங்கை பார்த்தாலும் அந்தாள் நிற்கும். சைக்கிள் பார்க் அடியில். தண்ணி குடிக்கும் இடத்தில். வாற போற வழியில்...எனக்கு எரிச்சலா வந்தது. பத்தி- வைச்ச துலைவான் ஆரெண்டு மட்டும் தெரிஞ்சா அவனைப் பிடிச்சு....அதுக்கு மேலை நான் சொல்ல மாட்டன்.


ஏதோ ஒரு வழியா கம்பசுக்கு போயிட்டன். யாழ்ப்பாணம் மாதிரியில்லை. பொம்பிளைப்பிள்ளையள் நல்ல வடிவு. வடிவைவிட ஸ்டைல் எண்டு சொல்லலாம். இஞ்சை மாதிரியில்லை. அங்கை பொம்பிளையளும் ஆம்பிளையளும் லெக்சர் ஹோலிலை கலந்துதான் இருக்கிறனாங்கள். சோடியள் சிலது ஒண்டோடை ஒண்டு சாய்ந்து நித்திரை கொள்ளும். ஒருத்தரும் ஒண்டும் சொல்லுறேல்லை.

முதலாவது பெரிய எக்சாம் வந்தது. ஒவ்வொருநாளும் நித்திரைகொள்ளேக்கை உந்தாள் வந்து கவனமடா! எங்கையெண்டு பார்த்துக் கொண்டிருக்கிறாங்கள் எண்டு சொல்லும். பயமா இருக்கும். சோதினை ஒருமாதிரி பாஸ்பண்ணியாச்சு!

லீவு கிடைத்து ஊருக்க வந்தேன். சோதியரையும் போய்ச் சந்தித்தேன். தேத்தண்ணி பிஸ்கட் எல்லாம் முடிய அந்தாள் சொன்னது “இனி எங்கையெண்டு பார்த்துக்கொண்டிருப்பாளவை கவனமடா!”

அந்தாள் சுழட்டித்தான் முடிச்சது. அவற்றை சொல்லை தட்டேலாது. இந்தமுறை அவர் சொன்ன அர்த்தம் கொஞ்சம் வேறை எண்டுமட்டும் விளங்கியது.

லீவு முடிய கம்பஸ் தொடங்கியது. சும்மா சொல்லக் கூடாது. சிங்களப்பிள்ளையள் நல்லா மூ பண்ணிக் கதைக்குங்கள். நீங்கள் பிழையா அதை விளங்கக் கூடாது. எனக்கு நித்திரைக்கு போகேக்கை “ கவனமடா எங்கையெண்டு பார்த்துக்கொண்டிருப்பாங்கள்” எண்டது நினைவு வரும். அப்பிடி நினைவு வராட்டா கனவு வரும்.

அபி தே போமுத (நாங்கள் தேத்தண்ணி குடிப்பமா) முதன்முறையா அவள் கேக்கேக்கை யோசிச்சன். டேய் கவனமடா..அந்தவார்த்தைகள் காதுக்குள் கேட்டன. மம சல்லி கெவன்னங்! (நான் தேத்தண்ணி காசை குடுக்கிறன்) நான் தயங்கினதை பார்த்து அவள் சொன்னாள். நான் ஒரு கஞ்சப் பிசுநாறி உண்டு அவளுக்கும் தெரிந்திருதது.

பைனல் ஒருமாதிரி பாஸ் பண்ணியாச்சு!

ஊருக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். பத்தும் பலதும் கதைத்தபின்னர்... இந்தமுறை அவர் அதைச் சொல்லவில்லை. ஆனாலும் சொன்னமாதிரிக் கேட்டது. பிரமையோ!

இரவு படுக்க நேரமாகிவிட்டது. “ கவனமடா! எங்கையெண்டு பார்த்துக்கொண்ருப்பாங்கள்” கனவோ நினைவோ தெரியவில்லை. முழித்துக்கொண்டேன். இரவு மூட மறந்திருந்த கொம்பியுட்டரில் இளம் யுவதியிடம் பலர் பலலட்ச ரூபா இழப்பு எண்டு செய்தி பதிவாயிருந்தது.

அதிகாலை மஞ்சலாட்டு மணி டாண் டாண் டாண் டாண் டாண் என அடித்து ஐந்து மணி என்று அறிவித்தது!!!

06.07.2011
















Friday, January 29, 2010

உரமாகிய மரம்!

வடலிப்பனையெல்லாம் வளர்ந்து பெரிதாகி
திடல் அடர்ந்து நெருக்கம் தெரிகிறது - தலைமுறிந்து
போன பனையெல்லாம் போகமுன்னர் தந்தவிதை
கானகத்தில் விளைந்த கதை!


சாகமுன்னம் நல்லவற்றை தந்திட்டம் எனுமகிழ்வில்
தாகம் இன்னும் சரியாக தணியாமல் - போனாலும்
எச்சம் புதுக்கதைகள் எழுதும் எனநினைப்பை
வைத்திருந்தால் எது வலி?

எங்கு தொடங்கினமோ எதில் போய்ச் சேரணுமோ
தங்கிய இடம் வழிய தரவிருக்கு - கம்பெடுத்து
அடித்து பெறமுடியா அவையெல்லாம் நன்றாக
படித்துப் பெறவேணும் பார்.





செத்ததெல்லாம் உரமாகும் செந்நெல் விதைமுளைத்தால்!
பற்றையெண்டா உரத்தின்ரை பயனெ்ன? - விட்டிடடா
குத்து வெட்டு குழிபறிக்கும் சேட்டைகளை
சத்துறிஞ்சி வாழும் தளிர்!

29 01 2010


Sunday, August 23, 2009

அடுத்த சீட்டிலை ஆச்சி!!!

நான் அப்ப குமரா இருக்கேக்கை நடந்தது எண்டு ஆச்சி சொல்லத் தொடங்கேக்கையே எனக்கு சுவாரசியம் பிடிபட்டுப்போச்சு. குமருகளின்ர கதையை கேட்கிறதெண்டா அது கிளுகிளுப்பாத்தானே இருக்கும். ஆச்சிக்கு இப்ப 75 அல்லது 80 வயதிருக்கும். ஆனா அவவின்ர மனதிலையும் நினைவுகள் பசுமரத்தாணியாக இருந்தே இருக்கிறது.

ஏ நைன் பாதை திறந்திட்டாங்களாம் எண்டது காட்டுத் தீபோல பரவினாலும் அது உண்மையா பொய்யா எண்டு கனபேருக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்திலை இருந்து வரலாமாம் ஆனா இங்கையிருந்து போக ஏலாதாம் எண்டது ஒரு பகுதி! அங்கையிருந்து வந்தாக்கள் மட்டும் திரும்பி போகலாமாம் எண்டது ஒரு பகுதி! இல்லை அரச உத்தியோகத்தர்கள் மட்டும் போகலாமாம் ஆனா போம் நிரப்பி கிளியரண்ஸ் எடுக்க வேணுமாம் எண்டது இன்னொரு பகுதி. இல்லை இல்லை பழைய கப்பல் துண்டு அல்லது பிளேன் ரிக்கட் இருந்தா போகலாமாம் எண்டது ஒரு பகுதி! யாருக்கும் எப்பிடி போறதெண்டது சரியா சொல்லத் தெரியேல்லை.

வவுனியா வந்தாச்சு. ஓடிப்போய் காலமை 10 மணிபோல டோக்கனும் எடுத்தாச்சு! இரண்டு மணிபோல பஸ் ஏற வாங்கோ எண்டு சொன்னாங்கள். எதுக்கும் 1.45 க்கே நாங்கள் வந்திட்டம். முதலாவது பிளைட் எண்டா 20 மயில் (அட ஆயிரம் ரூபா பாருங்கோ) குடுக்கிறதெண்டதை விட அவையள் வரச்சொல்லுற அதிகாலை 3.30க்கு வாறதுதான் சனங்களுக்கு பெரிய கஸ்டமான விசயம். அதிலும் பிளைட் எப்ப எடுப்பான் எண்டே தெரியாமல் காத்துக்கொண்டு 10மணிவரைஇருக்கிறதைவிட இங்கை 5 மணி பஸ்க்கு 2 மணிக்கு வாறது என்ன பெரிய விசயமே! யாரும் விசயம் விளங்காதவை யெண்டா அது என்ன 5 மணி பஸ்க்கு 2 மணிக்கே போறது எண்டு கேப்பினம். அவையள் பிளைட்டுக்கும் கப்பலுக்கும் பதிஞ்சு அலைஞ்ச அனுபவம் இல்லாத ஆக்கள் கண்டியளோ!!!

நானும் பரமனும் தான் ஏ9 ஆலை யாழ்ப்பாணம் போறதெண்டு கொழும்பிலை இருந்து வவுனியா வெளிக்கிட்டது. பஸ்க்கை எனக்கு அடுத்த சீட்டிலை ஆச்சி இடம் பிடித்தா. நான் யன்னல் கரை!!!!

நீண்ட தூரப் பயணம். ஒரு பேச்சுத் துணைக்கு ஆராவது அம்பிடவேணுமே. ஆச்சி அம்பிட்டா.

ஆச்சி நல்லா கடவுளைக் கும்பிடணை வடிவா ஊர் போய் சேர வேணும் எண்டு.

ஓமப்பு கடவுள் கைவிடமாட்டார். அவர்தானே பாதையை திறந்து தந்தவர்.

ஆச்சி துணிவாகவே இருந்தது.

ஆச்சி தேங்காய் வேண்டி வைச்சிருக்கிறியே முறிகண்டிப் பிள்ளையாருக்கு அடிக்கவோ.இல்லாட்டா பிள்ளையார் கோவிச்சுப் போடுவார்.!!

என்னப்பு கதை சொல்லுறாய் எத்தினை வருசமாய் நாங்கள் பிள்ளையாரை ஆதரிச்சனாங்கள். நாங்கள் வன்னிக்கை வந்த காலமிருந்து பிள்ளையாரோடைதான்.

ஆச்சி கனகாலமாய் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கேல்லை. பிள்ளையார் கோவப்பட்டு யானையை அனுப்பப் போறார்.

அப்பதான் ஆச்சி கதை சொல்லத் தொடங்கியது. நாங்கள் வந்தது வன்னிக்கை 50 வருசத்துக்கு முன்னர் அப்பன். அப்ப நான் கட்டாத குமர். ஒருநாள் உப்பிடித்தான் என்னை தனிய விட்டிட்டு அப்பும் ஆச்சியும் எங்கையோ போட்டினம். இரவு வெளியிலை ஒரே சத்தம் . எட்டிப்பார்த்தா யானை. தனியன் யானை. பயந்து போனன். கத்திக்கொண்டு நெருப்பு மூட்டி மணியடிச்சன். யானை பயந்து ஓடியிட்டுது. என்ர குறளலைக் கேட்டுத்தான் அது ஓடினதா அண்டையயல் சொன்னது. பேந்து அண்டைக்கு அண்டையயல் முழிச்சிருந்து காவல் காத்தது.

ஆச்சி இவ்வளவு துணிச்சலாய் இருந்திருக்குது. ”ஆச்சி லவ் பண்ணியே கலியாணம் கட்டினது?” கொஞ்சம் கனமான கேள்வி எண்டாலும் நேரிலே கேட்டு வைத்தேன்.

இல்லையப்பு பேசிச் செய்தது.

உந்த விசயத்திலை ஆச்சி கொஞ்சம் பொய்சொன்னதாகவே எனக்குப் பட்டது.

எத்தினை பிள்ளையள் ஆச்சி

மூண்டு

என்ன செய்யினம்?

முகாமுக்கை தான் தம்பி!!

அப்ப ஆச்சியை மட்டும் வெளியிலை விட்டவையே?

இல்லையப்பன் நான் கண் ஒப்பிறேசன் செய்யவந்தாப்போல இங்காலை அம்பிட்டிட்டன். பிள்ளையள்தான் பாவம் அங்கை ஓடி இங்கை ஓடி கடைசியா உங்கை முகாமிலை இருக்குதுகள்.


டிக்கட் டிக்கட்
கொண்டக்டர் டிக்கட் கிழிக்க தொடங்கியிருந்தார்.

ஆச்சி உனக்கு நான் டிக்கட் எடுக்கட்டே.
முகாமிலை பிள்ளையள் எண்டு கேட்டதாலை வந்த உணர்வா எண்டு தெரியவில்லை.

ஆச்சி வேணாம் எண்டிட்டுது.
காசு கிடக்கப்பன். ஏதோ பாதை திறந்திருக்கிறதாலை முகாமிலை இருக்கிற பிள்ளையளை பார்க்க கூடியதா இருக்கு.

உண்மைதான்
ஆச்சி பிளைட் எடுத்தா யாழ்ப்பாணத்தால வர முடியும்?


ஆச்சி அடுத்த கிழமையும் முகாமிலை இருக்கிற பிள்ளையளை பார்க்க ஏ9 ஆலை வரும்.

ஆச்சி தேங்காய் உடைக்கவோ இல்லை நான் மூத்திரம் பெஞ்சு போட்டு முகம் கழுவவோ முறிகண்டியில் பஸ் நிற்கவில்லை.

முறிகண்டியில் மட்டுமல்ல வன்னியின் வேற எந்த இடத்திலும்!!!!

22.08.2009

Thursday, July 16, 2009

சுழல் சக்கரம்

அப்ப எனக்கு எட்டு வயதிருக்கும். அந்த வயசிலை நடந்ததெல்லாம் உங்களுக்கெண்டா மறந்து போயிருக்கும். ஆனா எனக்கு அப்பிடியில்லை. 1987 ஆம் ஆண்டு எங்களுக்கு மறக்கேலாது. எங்கடை ஊரிலை தாங்கள் 56 இலை அடி வாங்கினாங்கள் 83 இலை வாங்கினாங்கள் எண்டு ஒரு பெருமையோடை சொல்லுவினம். அடி வாங்கிறதிலும் பெருமை இருக்குத் தானே!!

அப்ப வடமராட்சியிலைதான் தொடங்கினது. அப்ப எனக்கு வடமராட்சி எங்கை கிடக்கு எண்டு தெரியாது. ஆனா வடமராட்சி எண்டா வடக்குப் பக்கம் இருக்கும் எண்ட அளவு எனக்குத் தெளிவிருந்தது. ஒப்பரேசன் லிபரேசன் எண்டுதான் அப்ப உதயன் பேப்பர் எழுதினது. உதயன் பேப்பரையே எழுத்துக் கூட்டி வாசிக்கிற எனக்கு ஒப்பரேசன் எண்டால் என்னவெண்டும் தெரியாது. லிபரேசன் எண்டா என்னவெண்டும் தெரியாது.


இப்பிடித்தான் அண்டைக்கு வானத்திலை பெரிய சத்தம். இஞ்சை போகுது அங்க போகுது எண்டு எல்லாரும் கத்தினவையே ஒழிய ஒருத்தரும் கண்ணாலை கண்டமாதிரித் தெரியேல்லை. கள்ளுச் சீவுற இராசே்ந்திரம் மாமா சொன்னார் தன்ர மரத்தை ஒரு எத்து எத்திப்போட்டுதெண்டு. ஒரு பிளேன் வந்து ஐஞ்சாப்பிரிந்து பறந்தாய்த்தான் அவர் சொன்னவர். தோட்டம் சாறிக் கொண்டிருந்த சுப்புறு மாமா அந்தப்பிளேன் மூண்டா பிரிஞ்சு போனதாக தான் சொன்னார். ஆனாலும் நாங்கள் இராசேந்ததிரம் மாமாவை தான் நம்பினது. அவர்தானே மரத்திலை நிண்டு பிளேனை கிட்டவாய் பார்த்தவர். அவர் சொன்னதுதான் சரியா இருக்கும்.

அண்டைக்கு பிளேன் போட்ட மூட்டை கூரையிலை விழுந்து ஒரு வீடு உடைஞ்சு போச்சு. ஆனா எல்லாருக்கும் புளுகம். குடுக்கிறதெய்வம் கூரையை பிச்சுக் கொண்டு குடுக்கும் எண்டு சந்தோசப் பட்டினம். இந்தியாக் காரன் எங்களை ்கைவிடமாட்டான் எண்டு திரவியம் அக்கா சொல்லிக் கொண்டு திரிஞ்சது. முந்தியெண்டா திரவியமக்காவின்ர கதையை ஒருத்தரும் கணக்கெடுக்கிறதில்லை. குடிகாரத் திரவியம் எண்டாலே அவ பேசேல்லை அவக்குள்ள போனவர்தான் பேசுறார் எண்டு அர்த்தம். ஆனா அண்டைக்கு திரவியமக்காவின்ர கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

என்ன நடந்துதோ தெரியாது எல்லாரும் கோயிலுக்கு ஓடுங்கோ எண்டாங்கள். கோயிலுக்கு போறதெண்டா குளிச்சு முழுகி எல்லோ போகோணும். ஆனா அண்டைக்கு ஒருதரும் குளிக்கவும் இல்லை. சாப்பிடவும் இல்லை. கோயிலுக்குள்ளை ஒரே சனம். மஞ்சலாட்டிலை தேருக்கு கூட இவ்வளவு சனம் வந்ததில்லை. ஒருத்தரும் வெளியே போகப்படாதெண்டாச்சு. பாயும் தலையணையும் காவிக்கொண்டு எல்லாரும் ஒரே அடிபிடி. அண்டைக்கு எனக்கு ்நித்திரை வரவில்லை.

எத்தினை நாள் எண்டு எனக்குத் தெரியாது. சூரியன் சந்திரன் வந்தது போனது கூட தெரியாது. இடைக்கிடை சடசட எண்டு சூட்டுச் சத்தம் மட்டும் கேட்கும். ஒரே பசி. கிடந்த பிஸ்கட் உழுத்தம்மா எல்லாம் நேற்றையோடையே முடிஞ்சு போச்சு. வீச மாமாதான் ஏதோ ஓடியாடித்திரிஞசார். கஞ்சி காய்ச்சப்போகினமாம் எண்டு கதை அடிபட்டது. பெண்டுகள் எல்லாம் தேங்காய் துருவிக் குடுத்தினம். காளாஞ்சி அறைக்குள்ள இருந்த சாமானிலை தான் உதெல்லாம் நடந்தது. ஐயரும் ஒண்டும் பறையேல்லை. அமுதன் ஓடிப்போய் சிரட்டை பொறுக்கினான். மொக்கன். வெளியிலையே போக விடுறாங்கள் இல்லை. உவன் சிரட்டை பொறுக்கி என்னெண்டு விளையாடப்போறான்.??


கஞ்சி காய்ச்சி முடிஞ்சது. கிடாரத்துக்குள்ள மேலும் பச்சைத் தண்ணியை ஊத்தினாங்கள். நான் நினைச்சன் ஒரு கிடாரம் கஞ்சி ஆற நேரம் எடுக்கும். அதாலை தான் சூட்டை குறைக்க தண்ணி ஊத்துறாங்கள் எண்டு. அமுதன் சொன்னான் எட மொக்கா இரண்டு கிடாரம் கஞ்சியும் இருக்கிற சனத்துக்கு குடுக்க காணாது அதாலைதான் தண்ணி ஊத்துறாங்கள் எண்டு.

குழந்தப்பிள்ளையள் முதலிலை வாங்கோ..

வீச மாமாதான் கொமாண்டிங்.
விழுந்தடிச்சுக் கொண்டு ஓடியாச்சு. கிட்டே போனபிறகுதான் விளங்கினது கஞ்சி இன்னும் சூடாறவில்லை. அதைவிட ஓடின அவசரத்திலை ஒரு பாத்திரமும் கொண்டு போகவில்லை. முழுசியடிச்சுக் கொண்டு நிற்கேக்கை அமுதன் தன்ர சிரட்டையிலை ஒண்டை தந்தான். கஞ்சி குடிச்சு முடிய பசி இன்னும் கூடியிற்றுது.

சடசட என சத்தம்.
ஐயோ என்ர பிள்ளை எண்டு யாரோ ஒரு மனிசி குளறிச்சு.
கர்ப்பகிரகத்திலை இருந்த மாது அக்காவுக்கு காயமாம். தூக்கிக் கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்திச்சினம். ஒரே ரத்த வாடை. கையிலை காயம். என்ர பசி பறந்து போச்சு. தூக்கமும் தான்.


உந்த களேபரம் எல்லாம் முடிய அம்மா சொன்னா எட கவனமா படியடா ஸ்கொலசிப் சோதனை வருதெண்டு.

எனக்கு அவ்வளவா படிப்பு ஓடாது. ஸ்கொலசிப் பாஸ்தான் . ஆனா ஏ எல் அவ்வளவு நல்லமில்லை. அமுதன் டொக்ரராயிட்டான்.

அமுதனை கன காலத்துக்கு பிறகு அகதி முகாமிலை கண்டன். போன மாசம்தான். அவன் டொக்ரர். நான் என்ஜிஓ. சின்னப்பிள்ளையள் முன்னுக்கு வாங்கோ. நான் சொல்லிக் கொண்டிருந்தன். வீச மாமாவின்ர இடத்திலை நான். என்ர இடத்திலை யாரோ ஒரு சின்னப் பெடியன்.
அண்ணை அண்ணை 10 நாளா சாப்பிடேல்லை.

இந்தியா கைவிடாது எண்டு சொல்லிக் கொண்டே திரவியக்கா செத்துப்போனாவாம்.


Monday, June 30, 2008

நல்லூர் கந்தசாமி கோவில் யாழ்ப்பாணம்

நல்லூர் தேரடி மேலே தெரிவது சந்திரன்

நான் யாழ்ப்பாணம் போனால் முதல் நாளே தவறாமல் போகும் இடம் நல்லூர் தான். துஷி அல்லது வேறு நண்பர்கள் இல்லாவிட்டால் கூட தனியே போய் ஒருக்கா சுற்றி விட்டு வராவிட்டால் ஏதோ ஒரு மாதிரி இருக்கும். நல்லூர் போவது கோவில் கும்பிட மட்டும் அல்ல என்று நண்பர்கள் சொன்னால் அதிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. பழசெல்லாம் மறக்க நான் என்னும் பழகவில்லை .


நல்லூர் கந்தசாமி கோவில் யாழ்ப்பாணம்





இரவு எட்டு மணிக்கு நல்லூர்!

என்ன உங்களுக்கும் புல்லரிப்பாக இருக்கா?


அழகிய காலை பொழுது

கோப்பாய் வெளியில் விடிகிறது .
2006 காலை