Sunday, August 23, 2009

அடுத்த சீட்டிலை ஆச்சி!!!

நான் அப்ப குமரா இருக்கேக்கை நடந்தது எண்டு ஆச்சி சொல்லத் தொடங்கேக்கையே எனக்கு சுவாரசியம் பிடிபட்டுப்போச்சு. குமருகளின்ர கதையை கேட்கிறதெண்டா அது கிளுகிளுப்பாத்தானே இருக்கும். ஆச்சிக்கு இப்ப 75 அல்லது 80 வயதிருக்கும். ஆனா அவவின்ர மனதிலையும் நினைவுகள் பசுமரத்தாணியாக இருந்தே இருக்கிறது.

ஏ நைன் பாதை திறந்திட்டாங்களாம் எண்டது காட்டுத் தீபோல பரவினாலும் அது உண்மையா பொய்யா எண்டு கனபேருக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்திலை இருந்து வரலாமாம் ஆனா இங்கையிருந்து போக ஏலாதாம் எண்டது ஒரு பகுதி! அங்கையிருந்து வந்தாக்கள் மட்டும் திரும்பி போகலாமாம் எண்டது ஒரு பகுதி! இல்லை அரச உத்தியோகத்தர்கள் மட்டும் போகலாமாம் ஆனா போம் நிரப்பி கிளியரண்ஸ் எடுக்க வேணுமாம் எண்டது இன்னொரு பகுதி. இல்லை இல்லை பழைய கப்பல் துண்டு அல்லது பிளேன் ரிக்கட் இருந்தா போகலாமாம் எண்டது ஒரு பகுதி! யாருக்கும் எப்பிடி போறதெண்டது சரியா சொல்லத் தெரியேல்லை.

வவுனியா வந்தாச்சு. ஓடிப்போய் காலமை 10 மணிபோல டோக்கனும் எடுத்தாச்சு! இரண்டு மணிபோல பஸ் ஏற வாங்கோ எண்டு சொன்னாங்கள். எதுக்கும் 1.45 க்கே நாங்கள் வந்திட்டம். முதலாவது பிளைட் எண்டா 20 மயில் (அட ஆயிரம் ரூபா பாருங்கோ) குடுக்கிறதெண்டதை விட அவையள் வரச்சொல்லுற அதிகாலை 3.30க்கு வாறதுதான் சனங்களுக்கு பெரிய கஸ்டமான விசயம். அதிலும் பிளைட் எப்ப எடுப்பான் எண்டே தெரியாமல் காத்துக்கொண்டு 10மணிவரைஇருக்கிறதைவிட இங்கை 5 மணி பஸ்க்கு 2 மணிக்கு வாறது என்ன பெரிய விசயமே! யாரும் விசயம் விளங்காதவை யெண்டா அது என்ன 5 மணி பஸ்க்கு 2 மணிக்கே போறது எண்டு கேப்பினம். அவையள் பிளைட்டுக்கும் கப்பலுக்கும் பதிஞ்சு அலைஞ்ச அனுபவம் இல்லாத ஆக்கள் கண்டியளோ!!!

நானும் பரமனும் தான் ஏ9 ஆலை யாழ்ப்பாணம் போறதெண்டு கொழும்பிலை இருந்து வவுனியா வெளிக்கிட்டது. பஸ்க்கை எனக்கு அடுத்த சீட்டிலை ஆச்சி இடம் பிடித்தா. நான் யன்னல் கரை!!!!

நீண்ட தூரப் பயணம். ஒரு பேச்சுத் துணைக்கு ஆராவது அம்பிடவேணுமே. ஆச்சி அம்பிட்டா.

ஆச்சி நல்லா கடவுளைக் கும்பிடணை வடிவா ஊர் போய் சேர வேணும் எண்டு.

ஓமப்பு கடவுள் கைவிடமாட்டார். அவர்தானே பாதையை திறந்து தந்தவர்.

ஆச்சி துணிவாகவே இருந்தது.

ஆச்சி தேங்காய் வேண்டி வைச்சிருக்கிறியே முறிகண்டிப் பிள்ளையாருக்கு அடிக்கவோ.இல்லாட்டா பிள்ளையார் கோவிச்சுப் போடுவார்.!!

என்னப்பு கதை சொல்லுறாய் எத்தினை வருசமாய் நாங்கள் பிள்ளையாரை ஆதரிச்சனாங்கள். நாங்கள் வன்னிக்கை வந்த காலமிருந்து பிள்ளையாரோடைதான்.

ஆச்சி கனகாலமாய் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கேல்லை. பிள்ளையார் கோவப்பட்டு யானையை அனுப்பப் போறார்.

அப்பதான் ஆச்சி கதை சொல்லத் தொடங்கியது. நாங்கள் வந்தது வன்னிக்கை 50 வருசத்துக்கு முன்னர் அப்பன். அப்ப நான் கட்டாத குமர். ஒருநாள் உப்பிடித்தான் என்னை தனிய விட்டிட்டு அப்பும் ஆச்சியும் எங்கையோ போட்டினம். இரவு வெளியிலை ஒரே சத்தம் . எட்டிப்பார்த்தா யானை. தனியன் யானை. பயந்து போனன். கத்திக்கொண்டு நெருப்பு மூட்டி மணியடிச்சன். யானை பயந்து ஓடியிட்டுது. என்ர குறளலைக் கேட்டுத்தான் அது ஓடினதா அண்டையயல் சொன்னது. பேந்து அண்டைக்கு அண்டையயல் முழிச்சிருந்து காவல் காத்தது.

ஆச்சி இவ்வளவு துணிச்சலாய் இருந்திருக்குது. ”ஆச்சி லவ் பண்ணியே கலியாணம் கட்டினது?” கொஞ்சம் கனமான கேள்வி எண்டாலும் நேரிலே கேட்டு வைத்தேன்.

இல்லையப்பு பேசிச் செய்தது.

உந்த விசயத்திலை ஆச்சி கொஞ்சம் பொய்சொன்னதாகவே எனக்குப் பட்டது.

எத்தினை பிள்ளையள் ஆச்சி

மூண்டு

என்ன செய்யினம்?

முகாமுக்கை தான் தம்பி!!

அப்ப ஆச்சியை மட்டும் வெளியிலை விட்டவையே?

இல்லையப்பன் நான் கண் ஒப்பிறேசன் செய்யவந்தாப்போல இங்காலை அம்பிட்டிட்டன். பிள்ளையள்தான் பாவம் அங்கை ஓடி இங்கை ஓடி கடைசியா உங்கை முகாமிலை இருக்குதுகள்.


டிக்கட் டிக்கட்
கொண்டக்டர் டிக்கட் கிழிக்க தொடங்கியிருந்தார்.

ஆச்சி உனக்கு நான் டிக்கட் எடுக்கட்டே.
முகாமிலை பிள்ளையள் எண்டு கேட்டதாலை வந்த உணர்வா எண்டு தெரியவில்லை.

ஆச்சி வேணாம் எண்டிட்டுது.
காசு கிடக்கப்பன். ஏதோ பாதை திறந்திருக்கிறதாலை முகாமிலை இருக்கிற பிள்ளையளை பார்க்க கூடியதா இருக்கு.

உண்மைதான்
ஆச்சி பிளைட் எடுத்தா யாழ்ப்பாணத்தால வர முடியும்?


ஆச்சி அடுத்த கிழமையும் முகாமிலை இருக்கிற பிள்ளையளை பார்க்க ஏ9 ஆலை வரும்.

ஆச்சி தேங்காய் உடைக்கவோ இல்லை நான் மூத்திரம் பெஞ்சு போட்டு முகம் கழுவவோ முறிகண்டியில் பஸ் நிற்கவில்லை.

முறிகண்டியில் மட்டுமல்ல வன்னியின் வேற எந்த இடத்திலும்!!!!

22.08.2009

Thursday, July 16, 2009

சுழல் சக்கரம்

அப்ப எனக்கு எட்டு வயதிருக்கும். அந்த வயசிலை நடந்ததெல்லாம் உங்களுக்கெண்டா மறந்து போயிருக்கும். ஆனா எனக்கு அப்பிடியில்லை. 1987 ஆம் ஆண்டு எங்களுக்கு மறக்கேலாது. எங்கடை ஊரிலை தாங்கள் 56 இலை அடி வாங்கினாங்கள் 83 இலை வாங்கினாங்கள் எண்டு ஒரு பெருமையோடை சொல்லுவினம். அடி வாங்கிறதிலும் பெருமை இருக்குத் தானே!!

அப்ப வடமராட்சியிலைதான் தொடங்கினது. அப்ப எனக்கு வடமராட்சி எங்கை கிடக்கு எண்டு தெரியாது. ஆனா வடமராட்சி எண்டா வடக்குப் பக்கம் இருக்கும் எண்ட அளவு எனக்குத் தெளிவிருந்தது. ஒப்பரேசன் லிபரேசன் எண்டுதான் அப்ப உதயன் பேப்பர் எழுதினது. உதயன் பேப்பரையே எழுத்துக் கூட்டி வாசிக்கிற எனக்கு ஒப்பரேசன் எண்டால் என்னவெண்டும் தெரியாது. லிபரேசன் எண்டா என்னவெண்டும் தெரியாது.


இப்பிடித்தான் அண்டைக்கு வானத்திலை பெரிய சத்தம். இஞ்சை போகுது அங்க போகுது எண்டு எல்லாரும் கத்தினவையே ஒழிய ஒருத்தரும் கண்ணாலை கண்டமாதிரித் தெரியேல்லை. கள்ளுச் சீவுற இராசே்ந்திரம் மாமா சொன்னார் தன்ர மரத்தை ஒரு எத்து எத்திப்போட்டுதெண்டு. ஒரு பிளேன் வந்து ஐஞ்சாப்பிரிந்து பறந்தாய்த்தான் அவர் சொன்னவர். தோட்டம் சாறிக் கொண்டிருந்த சுப்புறு மாமா அந்தப்பிளேன் மூண்டா பிரிஞ்சு போனதாக தான் சொன்னார். ஆனாலும் நாங்கள் இராசேந்ததிரம் மாமாவை தான் நம்பினது. அவர்தானே மரத்திலை நிண்டு பிளேனை கிட்டவாய் பார்த்தவர். அவர் சொன்னதுதான் சரியா இருக்கும்.

அண்டைக்கு பிளேன் போட்ட மூட்டை கூரையிலை விழுந்து ஒரு வீடு உடைஞ்சு போச்சு. ஆனா எல்லாருக்கும் புளுகம். குடுக்கிறதெய்வம் கூரையை பிச்சுக் கொண்டு குடுக்கும் எண்டு சந்தோசப் பட்டினம். இந்தியாக் காரன் எங்களை ்கைவிடமாட்டான் எண்டு திரவியம் அக்கா சொல்லிக் கொண்டு திரிஞ்சது. முந்தியெண்டா திரவியமக்காவின்ர கதையை ஒருத்தரும் கணக்கெடுக்கிறதில்லை. குடிகாரத் திரவியம் எண்டாலே அவ பேசேல்லை அவக்குள்ள போனவர்தான் பேசுறார் எண்டு அர்த்தம். ஆனா அண்டைக்கு திரவியமக்காவின்ர கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

என்ன நடந்துதோ தெரியாது எல்லாரும் கோயிலுக்கு ஓடுங்கோ எண்டாங்கள். கோயிலுக்கு போறதெண்டா குளிச்சு முழுகி எல்லோ போகோணும். ஆனா அண்டைக்கு ஒருதரும் குளிக்கவும் இல்லை. சாப்பிடவும் இல்லை. கோயிலுக்குள்ளை ஒரே சனம். மஞ்சலாட்டிலை தேருக்கு கூட இவ்வளவு சனம் வந்ததில்லை. ஒருத்தரும் வெளியே போகப்படாதெண்டாச்சு. பாயும் தலையணையும் காவிக்கொண்டு எல்லாரும் ஒரே அடிபிடி. அண்டைக்கு எனக்கு ்நித்திரை வரவில்லை.

எத்தினை நாள் எண்டு எனக்குத் தெரியாது. சூரியன் சந்திரன் வந்தது போனது கூட தெரியாது. இடைக்கிடை சடசட எண்டு சூட்டுச் சத்தம் மட்டும் கேட்கும். ஒரே பசி. கிடந்த பிஸ்கட் உழுத்தம்மா எல்லாம் நேற்றையோடையே முடிஞ்சு போச்சு. வீச மாமாதான் ஏதோ ஓடியாடித்திரிஞசார். கஞ்சி காய்ச்சப்போகினமாம் எண்டு கதை அடிபட்டது. பெண்டுகள் எல்லாம் தேங்காய் துருவிக் குடுத்தினம். காளாஞ்சி அறைக்குள்ள இருந்த சாமானிலை தான் உதெல்லாம் நடந்தது. ஐயரும் ஒண்டும் பறையேல்லை. அமுதன் ஓடிப்போய் சிரட்டை பொறுக்கினான். மொக்கன். வெளியிலையே போக விடுறாங்கள் இல்லை. உவன் சிரட்டை பொறுக்கி என்னெண்டு விளையாடப்போறான்.??


கஞ்சி காய்ச்சி முடிஞ்சது. கிடாரத்துக்குள்ள மேலும் பச்சைத் தண்ணியை ஊத்தினாங்கள். நான் நினைச்சன் ஒரு கிடாரம் கஞ்சி ஆற நேரம் எடுக்கும். அதாலை தான் சூட்டை குறைக்க தண்ணி ஊத்துறாங்கள் எண்டு. அமுதன் சொன்னான் எட மொக்கா இரண்டு கிடாரம் கஞ்சியும் இருக்கிற சனத்துக்கு குடுக்க காணாது அதாலைதான் தண்ணி ஊத்துறாங்கள் எண்டு.

குழந்தப்பிள்ளையள் முதலிலை வாங்கோ..

வீச மாமாதான் கொமாண்டிங்.
விழுந்தடிச்சுக் கொண்டு ஓடியாச்சு. கிட்டே போனபிறகுதான் விளங்கினது கஞ்சி இன்னும் சூடாறவில்லை. அதைவிட ஓடின அவசரத்திலை ஒரு பாத்திரமும் கொண்டு போகவில்லை. முழுசியடிச்சுக் கொண்டு நிற்கேக்கை அமுதன் தன்ர சிரட்டையிலை ஒண்டை தந்தான். கஞ்சி குடிச்சு முடிய பசி இன்னும் கூடியிற்றுது.

சடசட என சத்தம்.
ஐயோ என்ர பிள்ளை எண்டு யாரோ ஒரு மனிசி குளறிச்சு.
கர்ப்பகிரகத்திலை இருந்த மாது அக்காவுக்கு காயமாம். தூக்கிக் கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்திச்சினம். ஒரே ரத்த வாடை. கையிலை காயம். என்ர பசி பறந்து போச்சு. தூக்கமும் தான்.


உந்த களேபரம் எல்லாம் முடிய அம்மா சொன்னா எட கவனமா படியடா ஸ்கொலசிப் சோதனை வருதெண்டு.

எனக்கு அவ்வளவா படிப்பு ஓடாது. ஸ்கொலசிப் பாஸ்தான் . ஆனா ஏ எல் அவ்வளவு நல்லமில்லை. அமுதன் டொக்ரராயிட்டான்.

அமுதனை கன காலத்துக்கு பிறகு அகதி முகாமிலை கண்டன். போன மாசம்தான். அவன் டொக்ரர். நான் என்ஜிஓ. சின்னப்பிள்ளையள் முன்னுக்கு வாங்கோ. நான் சொல்லிக் கொண்டிருந்தன். வீச மாமாவின்ர இடத்திலை நான். என்ர இடத்திலை யாரோ ஒரு சின்னப் பெடியன்.
அண்ணை அண்ணை 10 நாளா சாப்பிடேல்லை.

இந்தியா கைவிடாது எண்டு சொல்லிக் கொண்டே திரவியக்கா செத்துப்போனாவாம்.